கண்ணதாசன் கவித்திறன் பற்றி எழுதியவர் அநேகம். நானும் அவர் புகழைப் பாட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலின் விளைவே இந்த தொகுப்பு. அவரின் பாடல் வரிகளை பக்தி , காதல், தத்துவம் , வீரம் , பாசம் என்று பல வகைகளையும் நாம் சுவைத்து உள்ளோம். பக்தி என்ற தலைப்பை பார்த்தால் பல கடவுள்கள் மீது பாடி உள்ளார். என்றாலும் கண்ணதாசன் அல்லவா ? முதலில் அவர் கிருஷ்ணன் மீது கொண்ட பக்தியை சுவைப்போம்
கண்ணதாசனும் கிருஷ்ணனும்
கண்ணனின் நிறம் என்ன ? கவிஞர் இப்படி வர்ணிக்கிறார் :
கண்ணனின் மேனி கடல் நீலம். அவன்
கண்களிரண்டும் வான் நீலம்.
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம். (கிருஷ்ண கானம்)
மேலும்,
பச்சை நிறம் அவன் திருமேனி
பவழ நிறம் அவன் செவ்விதழ்கள்
மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திரு உள்ளம் (திருமால் பெருமை)
அவன் கருப்பு சரி. ஆனால் ஒரு பெண் கருப்பு என்று ஒதுக்கி வைக்கப்படும் போது அவள் கண்ணனிடம் எப்படி அழுகிறாள் தெரியுமா?
மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
என்றவர் ,
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (நா.ஒ.பெண்)
என்று உரிமையோடு கண்ணனை திட்ட அவரால் மட்டுமே முடியும்.
நாயகி பாவத்தில் அவர் கண்ணனிடம் ராதை ஊடல் செய்வது போல் ,
கோபியர் தம்மை தொட்ட கைகள் எந்தன்
கூந்தலை தொட வேண்டாம்.
நான் கோடியில் ஒன்று அல்ல.
கொஞ்சிட வர வேண்டாம். என்
கோலமும் கெட வேண்டாம். (கி.கானம்)
ஆனால் திருடன் சும்மா விடுவானா?
சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள் மேனியை
தொடவும் செய்தான் கண்ணன்
மீண்டொரு கலகம் செய்தான்.
என்று முடிக்கிறார். எவ்வளவு அழகு ?
அதே கிருஷ்ண கானத்தில்
மோகனனின் பெயரைச்சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி
நெய் இருக்குது ராமா ஹரி .
படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம்
பொடிபொடியாய் நொறுங்குதடி
அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ண ஹரி
என்று அவன் பெருமையை விளக்குகிறார்.
மனம் துன்பத்தில் உழலும் போது அவர் கதா பாத்திரங்கள் வாயிலாக கிருஷ்ணனிடம் கூறியவை நமக்கு என்றும்
ஆறுதல் அளிப்பவை. உதாரணங்கள் :
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள். அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்.
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்?
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்
விலகும் கண்ணா. (அவன்தான் மனிதன்)
தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்.
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்.
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா. (ராமு)
என்னும் போது நமக்கும் துன்பம் குறைந்து விடுகிறது.
பாரதியை போல இறைவனை நண்பனாய், சேவகனாய், காதலியாய், ஆசானாய் பார்த்த நம் கண்ணதாசனை
நாமும் தொடர்ந்து ரசிப்போம்.
==================================================================
பாரத மாதா , அன்னை பூமி , மங்கையராய்ப் பிறப்பதற்கே ,,....
எதற்கு இந்த பீடிகை என்று நினைக்கிறீர்களா?
இதோ டைம்ஸ் ஆப் இந்தியாவில் 16 .06.2011 அன்று வந்த செய்தியினை படியுங்கள் :
உலகத்தில் உள்ள நாடுகளில் பெண்கள் வாழ்வதற்க்கு மிக மோசமான நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில உள்ளது. இது Thomson Reuters Foundation எடுத்த சர்வே வெளியீடாகும்.
நமக்கும் கீழே மோசமான நாடுகள் எவை தெரியுமா?
ஆப்கான , காங்கோ, பாகிஸ்தான், சோமாலியா ஆகியவை.
மிக அதிகமாக விபச்சாரம், பெண் சிசு கொலை, மேலும் கடந்த நூற்றாண்டில் ஐந்து கோடி பெண்கள் காணாமல் (!) போயிருக்கிறார்கள் என்ற பெருமையினால் (!) நமக்கு நான்காவது இடம் கிட்டியிருக்கிறது.
நம்ப முடியவில்லை. மாதொரு பாகன் ,பாரத மாதா, தமிழ் தாய் போன்று பல வகைகளிலும் பெண் பெருமை போற்றும் நாம் நாடா இப்படி?
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா -
அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா - எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
புதுவை ராம்ஜி
No comments:
Post a Comment